தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வேண்டும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவுறுத்து!

Sunday, October 31st, 2021

நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ “தொழிற்சங்கங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானது என்று சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய களனி பாலத்தை பார்வையிடும் விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தொழிற்சங்கங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானது என்று சொல்ல முடியாது.

தொழிற்சங்கம் என்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும். அண்மையில் துறைமுக தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையத்தை வழங்குவதை எதிர்த்தன. இதன் விளைவாக கிழக்கு முனையத்திற்கு பதிலாக அதனைவிட பெரிய மேற்கு முனையம் வழங்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைவதாக இருந்தால் தொழிற்சங்கங்கள் ஏன் அதனை எதிர்க்கின்றன?

குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் அது ஊழல் ஆகாது. தொழிற்சங்கங்கள் அதிக விலைக்கு சார்பாக இருந்தால் அதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது.

அந்தவகையில் தொழிற்சங்கங்கள் இந்த நாட்டு மக்களை இரண்டு நாட்களுக்கு இருளில் வைத்திருக்க முயல்கின்றன என்றால் அது எத்தகைய அநீதியான முடிவாகும்.

இதை அறிவுள்ள நாட்டு மக்கள் கவனமாக பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் மின்சார விலையை குறைக்கும் அரசின் திட்டம் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: