தொற்றாளர்களை கண்டறிய புதிய நடைமுறை – விசேட திட்டம் வகுக்கும் சுகாதார அமைச்சு!

Saturday, April 11th, 2020

அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடொன்றினை எடுக்கும் பொருட்டு இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்று நோய் ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது குறித்து இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்ததாவது,

‘தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் சிறிய வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. நாம் பரிசோதனைகளை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்திலேயே அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனூடாக நாட்டில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது.

எனினும் எமக்கு மற்றொரு சவால் உள்ளது. அது தான் எந்த நோய் அறிகுறியும் இல்லாத கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருப்பின் அவர்களை நாம் அடையாளம் காண வேண்டும்.

அதனால் நாம் கொரோனா தொடர்பில் அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் இருந்து மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது உறுதியாக நாம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என்பதை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

உண்மையிலேயே நாம் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால் அடுத்த வாரமாகும் போது, தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் வீழ்ச்சி காண வேண்டும். அப்படியானால் மட்டுமே நாம் அன்றாட நடவடிக்கைகளின் பால் மீளலாம். ‘ என்றார்.

இந் நிலையிலேயே அதி அபாய வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ், கண்டி மற்றும் இரத்தினபுரியில் இரு பொலிஸ் பிரிவுகளில் பொது மக்களின் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், தற்போதைய சூழலில், கொரோனா தொற்றாளர்கள் பதிவாவது குறைவடைந்திருந்தலும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தற்போது உள்ள இறுக்கமான ஊரடங்கு நடைமுறைகளை பேண வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்று நோய் ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்

Related posts: