தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் 25 பவுண் நகை திருட்டு – 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் சந்நிதியானின் தேர் உற்சவத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பாகங்களிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அதேவேளை, காவடி எடுத்தல், அடியழித்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், கற்பூரச்சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக் கடன்களையும் பெருமளவான பக்தர்கள் நிறைவேற்றினர்.

பக்தர் கூட்டத்தைப் பயன் படுத்தித் திருடர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பல பக்தர்கள் தங்கள் தங்க நகைகளைப் பறிகொடுத்துவிட்டு அலைந்து திரிந்ததையும் காண முடிந்தது.

அதேவேளை நேற்றைய தேர்த் திருவிழாவில் மட்டும் சுமார் 25 பவுண் நகைகள் திருட்டுப்போயுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. நகைகள் திருடப்பட்டமை தொடர்பாகத் தங்களுக்கு 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் நேற்று மாலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: