தேவையேற்படின் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு நாட்டையும் முடக்கும் தீர்மானம் கிடையாது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தேவையேற்படின் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போது கொரோனா தாக்கம் பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறான நிலையிலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுத்தியுள்ளது. பல நெருக்கடியான சூழ்நிலையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் தடுப்பூசி நிறுவனங்களின் உற்பத்திகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக தடுப்பூசி இறக்குமதியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுவருட கொரோனா கொத்தணி ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முழு நாட்டையும் முடக்கும் நோக்கம் கிடையாது. முழு நாட்டையும் முடக்கினால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படுவார்கள். தேவையாயின் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகொள்ள பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். கொரோனா தாக்கம் கல்வித்துறைக்கு பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தையும், எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள சவால்களையும் கருத்திற் கொண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை, உயர்தர பரீட்சை ஆகிய தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

காலம் மாற்றத்தினால் மாணவர்கள் 8 மாத காலத்திற்கு முன்னர் தங்களின் கற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

துறைமுக ஆணைக்கு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த திருத்தங்களை உயர்நீதிமன்றம் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: