தேர்தல் பிற்போட்டமைக்கு நாம் பொறுப்பல்ல- மஹிந்த தேஷப்பிரிய!

Wednesday, September 7th, 2016

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே பொறுப்பு கூறவேண்டும் என தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, ‘தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில் பூர்த்திசெய்யப்படாத பட்சத்தில் எவ்வாறு தேர்தலொன்றினை நடத்துவது? தேர்தலைச் சுதந்திரமானதும் நேர்மையானதுமான முறையில் நடத்துவதற்கே, தேர்தல்கள் திணைக்களம் கடமைப்பட்டுள்ளது. வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் கண்டியில், 40 சதவீதமானவை நிறைவடைந்துள்ளன. கொழும்பில் வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கை முடிந்துவிட்டது.

ஆனால், மீள் பரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் யாழ்ப்பாணத்திலும் வாக்காளர் கணக்கெடுப்பானது முடிவடைந்துள்ள நிலையில், மீள்பரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மாதம் 15ஆம் திகதிக்குள் இப்பணிகள் நிறைவடையும், 2016ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில், இம்முறை 15.69 மில்லியன் மக்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 8,000 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாட்டு விண்ணப்பங்கள், தங்களது பெயர் இடாப்புக்களில் உட்சேர்க்கப்படவில்லை என்பதற்கான உரிமையைக் கோரிகைக்கான படிவம் அனுப்பப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Mahinda-Deshapriya-e1375338496657

Related posts: