தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது – சபாநாயகர் அறிவிப்பு!

Thursday, August 10th, 2023

தேசிய கடன் மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றி நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு எதிராக, எந்தவொரு வகையிலும் உத்தரவு அல்லது தீர்ப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான எந்தவொரு உத்தரவும் அல்லது நீதிமன்ற தீர்ப்பும் அரசியலமைப்பு மீறலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவிற்கு அமைய, அரச நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு நாடாளுமன்றத்தின் வசம் காணப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டமானது அமைச்சரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு, நாடாளுமன்ற அரச நிதி தொடர்பான செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதாகவும் சபாநாயகர் இதன்போது நினைவுபடுத்தினார்.

அதற்கமைய, குறித்த யோசனையானது உயர் நீதிமன்றத்தில் அல்லது 1978 ஆம் ஆண்டின் இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட வேறு எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரணைக்குட்படுத்த, மறுபரிசீலனை செய்ய அல்லது சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடாளுமன்ற செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்த அல்லது தலையீடு செய்ய நீதிமன்றத்திற்கு முடியாது என முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க மிகத் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: