தேசிய அளவில் சிந்தித்து செயற்படக்கூடிய அரசியல் முறைமையொன்று நாட்டுக்கு அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Sunday, July 14th, 2024
தேசிய அளவில் சிந்தித்து செயற்படக்கூடிய அரசியல் முறைமையொன்று நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு எதிர்காலத்துக்கான முதல் அடியை வெற்றிகரமாக வைத்திருக்கிறோம்
தற்போது பின்பற்றும் பொருளாதார முறைமைகள் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியாது. இதனால் ஒரு நாடு என்ற வகையில் மேலும் கடன் படுவதை மாத்திரமே செய்ய முடியும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் எதிர்பார்க்கும் சிறந்த எதிர்காலம் கிடைக்காது.
அதேபோல் இன்னும் 15 வருடங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். அதனால் நாடாக முன்னோக்கிச் செல்வதா? மீண்டும் பொருளாதாரம் சரிவடைய இடமளிப்பதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்துக்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாக்கும் வகையில் வலுவாக கட்டமைக்கப்பட வேண்டும்.
எனவே அரசாங்கம் என்ற வகையில் நாம் 2050 பற்றி சிந்திக்காமல் 2075 வரையில் தூர நோக்குடன் சிந்திக்க வேண்டியது அவசியம்.
அதனாலேயே நாட்டின் இறக்குமதி பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாட்டில் பல முறைமைகள் மாற்றப்பட வேண்டும். அதற்காகவே பொருளாதார பரிமாற்றச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னர் தேசிய ரீதியில் சிந்தித்துச் செயற்படக்கூடிய அரசியல் குழுவொன்று நாட்டுக்கு கிடைத்துள்ளது.
5 வருடங்களில் ஆட்சி மாற்றம் செய்வது குறித்து சிந்திப்பதற்கு மாறாக தேசிய மட்டத்தில் சிந்தித்துச் செயற்படக்கூடிய அரசியல் முறைமையே எதிர்காலத்திலும் நாட்டு அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


