தூத்துக்குடியில் இருந்து காங்கேசன்துறைக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும். பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து சேவை!

Thursday, November 9th, 2023

தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் கே.கே.எஸ் துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவையானது எதிர்வரும் 2024ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாகக் கொண்டு,  தூத்துக்குடி- காங்கேசன்துறை,  தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் டுபாயில் உள்ள தனியார் நிறுவனம் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் கட்டமாக தூத்துக்குடி- காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளதுடன்,  இதற்கான கப்பல் விரைவில் தூத்துக்குடிக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பலானது தினசரி 120 கடல் மைல் தொலைவை 3 முதல் 4 மணிநேரத்தில் கடக்கும். அதேவேளை குறித்த கப்பலில் 400 பயணிகள், 40 கார்கள், 28 பஸ்கள் மற்றும் ட்ரக்களை கொண்டு செல்ல முடியும்.

சாதாரண கட்டணமாக 6000 இந்திய ரூபாவும், வர்த்தக வகுப்பு பயணிகளிடம் 12,000 இந்திய ரூபா கட்டணமும் அறவிடப்படவுள்ளது.

சுற்றுலாவிற்கு சொந்தமான கார்கள் மற்றும் பஸ்களில் செல்பவர்கள்இ தங்கள் கார்கள் மற்றும் பஸ்களையும் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்று, மீண்டும் திரும்பி வர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: