துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Thursday, May 20th, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமையும் இடம்பெற்றது.
குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தின் பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
முன்பதாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்தநிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்றுமுன்தினம் சபையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும் விசேட பெரும்பான்மையும் அவசியம் என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் உயர்நீதிமன்ற தீர்பை ஏற்றுக்கொண்டு திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை குறித்த திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையிலேயே குறித்த சட்டமூலம் 89 மேலதிக வாக்ககளால் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: