தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது- பிரதமர் ரணில்

Friday, April 1st, 2016

நாட்டில் இனியொருதடவை தீவிரவாதமும், இனவாதமும் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கொழும்பில் நேற்று(31) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னிடம் வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் நடந்த பகுதிகளில், போருக்கு பின்னர் ஆயுதங்கள் மீட்கப்படுவது வழமையானது என தெரிவித்துள்ள பிரதமர், அங்கு மீட்க்கப்படும் ஆயுதங்கள் தொடர்பில் வட பகுதியிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தீவிரவாதிகள் அல்லது வேறு குழுவினர் செயற்படுகிறார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்..

Related posts: