திறைசேரி முறிகள் தொடர்பில் விசாரணை நடத்த கோரிக்கை!

Friday, May 6th, 2016
திறைசேரி முறிகள் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஊழலுக்கு எதிரான முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் ஊழலுக்கு எதிரான முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியும், கடந்த மாதம் முதலாம் திகதியும் முன்னெடுக்கப்பட்ட திறைசேரி முறிகள் விநியோகம் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக ஊழலுக்கு எதிரான முன்னணி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்விதமான தொழில்சார் தன்மையும் இல்லாமை மற்றும் ஒழுங்கு பேனப்படாமை ஆகிய காரணங்களாலேயே கடந்த அரசாங்க காலத்தில் திறைசேரியின் நடவடிக்கைகள் தொடர்பில் தமது அமைப்பு கடும் விமர்சனம் வெளியிட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், இதுவரை முன்னெடுக்கப்பட்ட முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவோ அல்லது பொருத்தமான வேறு விசாரணை பொறிமுறையோ ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழலுக்கு எதிரான முன்னணி ஜனாதிபதியிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: