திருநெல்வேலி விடுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது!

Thursday, September 14th, 2023

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தரை நேற்று மாலை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்றுமுன்தினம் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

சிறுமி திருகோணமலையில் தனது தந்தையுடன் வளர்ந்துள்ளார். அம்மம்மா மற்றும் சிறுமி இருவரும், கடந்த 9 ஆம் திகதி அந்த விடுதிக்கு வந்துள்ளனர். சிறுமிக்கு உளச்சிக்கல்கள் உள்ளதாகவும்,அதற்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற வந்ததாகவும் விடுதியில் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் அவர் வெளியில் சென்று வந்தார். அதன் பின்னர் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளிவராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸார் விடுதி அறையின் கதவை உடைத்தபோது சிறுமி உயிரிழந்த நிலையிலும் அம்மம்மா மயக்கமுற்ற நிலையிலும் காணப்பட்டார்

இதனையடுத்து சிறுமியின் அம்மம்மா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை கோப்பாய் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்தது.

இதன்போது விடுதியில் கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தை அடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: