திருட்டு அதிகரிப்பு – பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவுறுத்து!

Monday, August 21st, 2023

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்ற திருட்டுக்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அண்மைக்காலமாக பகல் மற்றும் இரவு வேளைகளில் வீடுகள் உடைக்கப்பட்டு பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான உடமைகள் திருட்டு போவதாக பெருமளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

எனவே பொதுமக்கள் தங்களின் பெறுமதியான உடமைகளை பாதுகாப்பாக வைப்பதுடன், வீட்டை விட்டு வெளியேறும் போது கதவு, ஜன்னலை பாதுகாப்பாக பூட்டி விட்டு செல்வதுடன், அருகில் உள்ள நம்பிக்கையான ஒருவருக்கு தெரியப்படுத்திவிட்டு செல்வது சிறந்தது.

அத்துடன் தங்களின் பிரதேசத்தில் அறிமுகம் இல்லாதவர்களின் நடமாட்டம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதுடன், சந்தேகத்திற்கிடமான வாகன இலக்கங்களை குறித்து வைப்பதும் களவுகளை தடுப்பதற்கு வசதியாக அமையும்.

பொதுமக்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குள் ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறும் பட்சத்தில் 0212270722 என்ற பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருட்டு சம்பவங்கள்  தொடர்பாக சாவகச்சேரி பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் பொலிஸாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: