தியத்தலாவை விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்கின்றது இராணுவம்!

Tuesday, April 23rd, 2024

தியத்தலாவை  ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக தற்போதுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதேவேளை, தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகன சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் சந்தேக நபர்கள் இரண்டு பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை தியத்தலாவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை மற்றும் பேராதனை பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 47 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் விபத்து தொடர்பில் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதில் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய சிவக்குமார் தனுசிகா என்ற சிறுமியும் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த விபத்தில் சிக்குண்ட 19 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில், 11 பேர் தியத்தலாவை வைத்தியசாலையிலும் 7 பேர் பதுளை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் வெலிமடை, சீதுவ, மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: