திங்கள்முதல் லிற்றோ எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் – அதுவரை வரிசையில் நிற்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022

விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமைமுதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் இரு நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என லிற்றோ அறிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக லிற்றோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் அந்த எரிவாயு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் எனவும் லிற்றோ நிறுவனத் தலைவர் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் நேற்று பொதுமக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: