தலைநகரின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Saturday, September 24th, 2022

தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய தகுதியான அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அனுமதியின்றி, அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த முடியாது என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு வலயத்திற்குள் பட்டாசு வெடிக்க கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி செயற்படும் மக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம், கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு கையெழுத்திட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் யுத்தம் நடைபற்ற காலத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நாட்டின் பல இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. போர் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: