தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் – நாட்டில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு..!

Tuesday, May 16th, 2023

கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்னதாக முன்பதிவு செய்த நபர்களுக்கான கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இன்னும் 2 நாட்களில் நிறைவடையும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நெரிசல் இன்றி வழமை போன்று கடவுச்சீட்டுகளை தமது அலுவலகத்தினால் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டு பெறுவதற்கு குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதற்கான வாய்ப்பை பெறுவதற்கு மக்கள் முந்தைய நாள் முதல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து வரிசையில் நிற்கும் சிலருக்குக் கூட கடவுச்சீட்டு பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பதையும் காணமுடிகிறது.

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டு வழங்குவது ஒரு நாளைக்கு 500 பேருக்கு மாத்திரம் என மட்டுப்படுத்தியமையே அதற்கு காரணமாகும்.

ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தாலும், வரிசைக்கு வெளியே உள்ளவர்களுக்கு சிலர் பணம் வாங்கிக்கொண்டு கடவுசீட்டு வழங்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: