தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – ஓய்வூதியத் திட்டமொன்றை வகுப்பது குறித்து அரசாங்கம் கவனம் – அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தகவல்!

Friday, January 21st, 2022

தனியார்துறையின் முறைசார் மற்றும் முறைசாரா பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமொன்றை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் தனது அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இலங்கையில் கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் இணைந்து கொள்ள இளைஞர், யுவதிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அவர்கள் அரச தொழில் வாய்ப்புக்களையே எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசதுறையில் பலம் மிக்க ஓய்வுதியத் திட்டமும் சமூகப்பாதுகாப்புத் திட்டமும் காணப்படுகின்றன.

தனியார் துறைக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் தவிர்ந்த ஏனைய எந்தப் பாதுகாப்பும் இல்லை.

கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக சம்பள கிடைக்கப்பெற்ற போதிலும் தனியார்துறை ஊழியர்களுக்கு அவ்வாறான பாதுகாப்புக் கிடைக்கவில்லை.

இந்நிலமையில் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பலமான ஓய்வூதிய மற்றும் சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டம் அவசியமாகும். இதற்கான ஆதரவை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தொழில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: