தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சம்பவம்!

Monday, September 20th, 2021

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த  48 வயதுடைய சோமசுந்தரம் ரவிச்சந்திரம் என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயலவர்கள் கூடி தீயினை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தவரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: