தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிய இன்றுமுதல் விசேட நடவடிக்கை!

Tuesday, June 6th, 2023

தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் மீது மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்றுமுதல் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

கோப்பைகள், கத்திகள், முட்கரண்டிகள், ஸ்ட்ராக்கள், மிக்சர்கள், தயிர் கோப்பைகள் மற்றும் கரண்டிகள், மாலைகள், கொப்பரை பாய்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்க் கொண்டு, பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பலமுறை தடை விதிக்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி நேற்று பல பொருட்களுக்கான தடையும் அமலுக்கு வந்தது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேற்றைய தினம் நடத்தியதுடன், முக்கிய நிகழ்வு கொழும்பு கோட்டையில் இடம்பெற்றது.

பிளாஸ்டிக் பாவனையானது சுற்றுச்சூழலுக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நல்வாழ்விற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் பத்திரகே தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சோதனைகள் மேலதிகமாக நடத்தப்பட்டு வருகின்றன.

2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சுமார் 1,650 சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார். 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட போதிலும், நாளாந்தம் சுமார் 950 தொன் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுவதாக தலைவர் குறிப்பிட்டார்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அகற்றாததால், அவற்றை சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சுத்தமான சூழலை உறுதி செய்வதற்கு கூட்டு முயற்சி தேவை என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: