ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது என்று கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“இலங்கை அரசியல் நெருக்கடிகளையும்,பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டுக்கு தலைமை தாங்கி நாட்டை சரியான திசை வழியில் நடத்திச் செல்லக் கூடியவர், கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள்தான் என்பதை நாம் நேர்மையாகவும், துணிச்சலோடும் அன்று கூறியிருந்தோம்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய கடமைப் பொறுப்பை செய்வதற்கு நாம் அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒருமித்து செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

இவ்வாறான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அர்த்தமுள்ள வகையிலும் தமிழ் மக்களின் கெளரவமான எதிர்காலத்தையும் ஆழமாக ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானங்களை எடுக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களாக இருப்பவர்கள் தமது தவறான தீர்மானங்களால் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களில் அரசியல் பலத்தை வீணடித்துள்ளார்கள்.

ஆனாலும் நாம் எப்போதும் தீர்க்கதரிசனமான தீர்மானங்களையே எடுத்திருக்கின்றோம். எமது தேசிய நல்லிணக்க அரசியல் முன்னெடுப்புக்களானது தமிழ் மக்களின் சமத்துவமான எதிர்காலத்தை வென்றெடுப்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவகை பிரச்சனைகளுக்கும்  தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  வழியேற்படுத்தும் என்பதே எமது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையாகும்.

வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது அரசியல் சாணக்கியமல்ல. நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் சாணக்கியமாகும்.

அந்தவகையில் எமது அனுபவமும், தீர்மானங்களும் அரசியல் சாணக்கியமானது என்பதை நாம் ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் மகத்தான வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியானது பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெற்றிபெறச் செய்யும் வெற்றியாக அமையும். இந்நிலையில், எமக்கான ஆதரவினை எமது மக்கள் இன்னும் அதிகமாக வழங்குவார்களாயின், மேலும் பல விடயங்களை சாத்தியமானதாக்க எம்மால் முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: