ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உள்ளக தகவல்கள் கசிவு – விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு!

Monday, June 26th, 2023

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்துள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிஐடியினருக்கு உத்தரவிட்டுளார்.

படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பொலிஸ் உள்ளக தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதற்கு காரணமானவர்களை கைதுசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதும் அவர்கள் நாடு திரும்பும்போதும் விசேடமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழமை என தெரிவித்துள்ள  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரியொருவர் ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தை பூர்த்திசெய்துகொண்டு நாடு திரும்புகின்ற போதும் அதே நடைமுறை  பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும்போதே நாட்டிற்கு திரும்பும்போதோ உரிய அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கப்படுவது வழமை என குறிப்பிட்டுள்ள  அந்த அதிகாரி பொலிஸாருக்கு வழங்கப்படும் அவ்வாறான அறிவுறுத்தல்களை ஊடகங்களிற்கோ அல்லது தனிநபர்களிற்கோ அனுமதியின்றி வழங்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சமூக ஊடகங்களில்  பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்களை கசியவிட்டவர்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைதுசெய்யுமாறு சிஐடியினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: