சேதனப் பசளை திட்ட யுத்தத்தையும் வெற்றி கொண்டு புதிய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாயாராகுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, June 4th, 2021

சேதனப் பசளை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கிராமியச் சூழலிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இதன்மூலம் கிராமங்களின் தூய்மையையும் அழகையும் பேண முடியும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜக்ச சமுர்த்தி உதவி பெறுநர்களை இதற்கு பங்களிக்கச் செய்ய வைப்பதன் மூலம் புதிய கிராமிய பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளையை உற்பத்தி செய்வதை துரிதப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக உர உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் எவை என்பது தொடர்பிலும் ஆராய்ந்து, அவற்றை இறக்குமதி செய்வதற்கும், உர உற்பத்தியை உள்ளூராட்சி நிறுவனங்களின் மட்டத்தில் மேற்கொள்வது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் உள்நாட்டில் தயாரிக்க முடியுமான இயந்திரங்களை அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் பங்களிப்புடனும் தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன்அந்த நிறுவனங்களுக்கு தொழிநுட்ப அறிவை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த புதிய முயற்சி வேலைத்த்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். என தெரிவித்த ஜனாதிபதி, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் ஆரோக்கியமான, உற்பத்தித்திறன் வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட்டபோதும், அது சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல என உலகில் பலரும் கூறினர். சேதனப் பசளை நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலும் அத்தகைய கருத்தே உள்ளது. அதனை வெற்றி கொள்வது இன்றைய யுகத்தின் தேவையாகும் என்பதையும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு விவசாயிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை போதுமானளவு தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்வது அவசியமானது என்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கருத்து தெரிவிக்கையில் – விவசாயத்திற்கு தேவையான முழுமையான சேதனப் பசளையை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், பற்றாக்குறைகள் ஏற்படுமாயின், விநியோகிக்கப்பட வேண்டிய சேதனப் பசளையின் அளவை அரசாங்கத்தின் மூலம் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் விவசாயிகளுக்குச் சேதனப் பசளையை விநியோகிக்கும்போது, மண் வளம் பற்றி பரிசோதனை செய்து, தேவையான அளவை மட்டும் பரிந்துரைப்பதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றையும், அதற்காக மண் வளத்தை பரிசோதிப்பதற்குத் தேவையான உபகரணங்களையும் நாட்டில் உள்ள அனைத்து கமநல சேவைகள் மத்திய நிலையங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மேலும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில், விவசாயிகளுக்குத் தேவையான தொழிநுட்ப அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனை இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனிடையே மண் வளத்தைப் பரிசோதனை செய்யும் உபகரணங்கள், கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கும் உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: