செவ்வாய்கிழமை கபொத உயர்தர பரீட்சை ஆரம்பம்!

Sunday, August 6th, 2017

எதிர்வரும் செவ்வாய்கிழமை கபொத உயர்தர பரீட்சை  ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நெடுந்தீவு, ஊர்காவற்துறை, நயினாதீவு ஆகிய தீவுகளிலும் இதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்று இலட்சத்து 15 ஆயித்து 227 பரீட்சார்த்திகள் இம்முறை கபொத உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர். விசேட தேவைகளைக் கொண்ட 260 பேர் இம்முறை பரீட்சைகளுக்கு தோற்றுகின்றனர்.

பரீட்சை காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது. பரீட்சார்த்திகள் காலை எட்டு மணியளவில் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கான அனுமதி அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு என்பனவற்றை கொண்டு வருவது கட்டாயமாகும். பரீட்சைக்கு சமூகமளிக்க முன்னர் நேர காலத்துடன் அனுமதி அட்டையை பரிசோதனை செய்வதுடன் தாம் விண்ணப்பித்துள்ள பாடம் மற்றும் மொழி கையெழுத்து உறுதி செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமாயின் அது தொடர்பாக பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றார்களா என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தமாறு பரீட்சை மத்திய நிலைய பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்படும். இம்முறை பரீட்சை பெறுபேறும் இவ்வாறானவர்களுக்கு ரத்து செய்யப்படும். பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளிநபர்களினால் பரீட்சார்த்திகளுக்கு தடை ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பாக பரீட்சை திணைக்களத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பரீட்சை மத்திய நிலைய பொறுப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியற்ற எந்தவொரு நபருக்கும் பரீட்சை நடைபெறும் நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது. பரீட்சை மண்டபத்தில் எவரேனும் ஒருவர் மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவார்களாயின் அது தொடர்பாக மத்திய நிலைய பொறுப்பாளருக்கும் பெற்றோருக்கும் பரீட்சைத் திணைக்களத்திற்கும் அறிவிக்க முடியும். கிடைக்கப் பெறும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு விசேட குழு தயாராக உள்ளது. பரீட்சைகள் கண்காணிப்பு குழு நாடு முழுவதிலும் ஈடுபடுத்தப்படவுள்ளது

Related posts: