செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாள்கள் தேவை – நடைமுறையிலுள்ள 200 நிமிட மின் துண்டிப்பு மேலும் அதிகரிக்கப்படாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, May 9th, 2022

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது 3 மணி நேரமும் 20 நிமிடங்களும், நாடு முழுவதிலும் அமுலாக்கப்படும் மின் துண்டிப்பு காலம் மேலும் அதிகரிக்கப்படமாட்டாது என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் குறித்த மின் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால் 270 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு இல்லாது போயுள்ளது.

அதனை சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றையதினமும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்பட்டதாகவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A முதல் டு மற்றும் P முதல் W வரையான வலையங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலையங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதுதவிர, M N O X Y Z ஆகிய வலையங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை மின்சார சபையும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் நிராகரித்துள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி, குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இதுவரையில் இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இலங்கை மின்சார சபை நேற்று (08) கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: