சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதமர் மகிந்த!

Thursday, February 10th, 2022

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் எமக்கும் அனுபவம் உள்ளது. முடியுமானால் சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து செயற்பட்டு வெற்றிபெறுமாறு நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு சவால் விடுக்கின்றோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தள்ளார்.

அநுராதபுரத்தில்  இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட சவாலை அவர் விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டாமென எதிர்க்கட்சி கோரியது. சீனாவின் தடுப்பூசி பலவீனமானது என தெரிவித்தனர்.

நாங்கள் மக்களை பாதுகாப்பதற்கான பணிகளை முன்னெடுத்தபோது அவர்கள் இந்த விளையாட்டை விளையாடினார்கள்.

விவசாயிகளின் பரம எதிரி அரசாங்கமே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு இந்த நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

எனினும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஐயாயிரம் நிவாரணத்தை வழங்கினோம். ஆசிரியர்களை வீதிக்கு இறக்கி, அரச ஊழியர்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்பியது யார் என்பது உங்களுக்குத் தெரியும்.

அரசாங்கத்தின் அனைத்து செயற்றிட்டங்களையும் குழப்ப இவர்கள் முயற்சிக்கின்றனர். தேவையெனின் மக்களுக்கு இடையில் நாமும் செல்வோம். முன்னைய ஆட்சியினர், அரச ஊழியர்கள், பௌத்த தேரர்கள், இராணுவ உறுப்பினர்களை சிறையில் அடைத்தார்கள். இராணுவத்திற்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு யோசனைகளுக்கு அனுசரணை வழங்கினார்கள்.தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தினார்கள்.

எனினும் நாங்கள் நாட்டை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: