சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் அஷோக சிறிவர்தனவிடம் வாக்குமூலம்!

Wednesday, May 1st, 2019

சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைபாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக சிறிவர்தனவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான முறைபாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ முன்வைத்தார். இந்தநிலையில், விஜேதாஸ ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறும் பொருட்டு அவரை நாளை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருதி கொடை மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குருதி கொடை மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், குருதி மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுக்கு முன்னாள் பணிப்பாளரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த கடிதம் தற்போது ஜனாதிபதியினால், ஜனாதிபதி ஆணைகுழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Related posts: