சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு : தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்குப் பிடியாணை !

Friday, March 18th, 2016

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு  யாழ். மல்லாகம் மாவட்ட  நீதிமன்றத்தில் நேற்று (17) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. யூட்சனால் தேசிய நீர் வழங்கல் சபையின் அதிகாரிகளுக்குப்  பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு கடந்த மாதம்-5 ஆம்  திகதி மல்லாகம் நீதிமன்றத்தில்  விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வடமாகாண விவசாய அமைச்சர்  பொ . ஐங்கரநேசன், வடமாகாண அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் , நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணை  மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ . யூட்சன் முன்னிலையில் கடந்த மாதம் -18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது முன்னைய  வழக்குத் தவணையின் போது  வடமாகாண விவசாய அமைச்சர்  பொ . ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் நேற்றைய தினத்துக்கு  ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கடந்த வழக்கு விசாரணையின் போது வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால்  அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர் தான் திடீரென வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் குறித்த தினத்தில்  நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்க முடியாது எனத் தெரிவித்து தனது சட்டத்தரணியூடாக கடந்த செவ்வாய்க் கிழமை மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி அனுமதி கோரியிருந்தார்.

இதன் படி அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான் அடுத்த வழக்குத் தவணையின் போது கண்டிப்பான ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான அறிக்கையொன்றைத் தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த  நிலையில்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்  சபையின் அதிகாரிகள் நேற்றைய தினம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்குச்  சமூகமளிக்காத காரணத்தால் அவர்களுக்கு எதிராக யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரினூடாகப்  பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட  பகுதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய நீரைப் பயன்படுத்தலாமா? பயன்படுத்த முடியாதா? என்ற ஆய்வறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதேச சபைகளில் பணம் போதாதன்  காரணமாகவே நிலத்தடி நீர் மாசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிக்க முடியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு  நீதிமன்றத்தில் அறிவித்தது.  எனினும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உரிய வகையில் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட மல்லாகம் மாவட்ட நீதவான்  வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் – 8 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

Related posts: