சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்துடன் 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை – ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 15th, 2023

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (14) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இருதரப்பினரும் பல துறைகளில் பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவதன் மூலம் மேலும் விருத்தி செய்யக்கூடிய பொருளாதார சாத்தியவளங்கள் மற்றும் முழுமைப்படுத்த வேண்டிய பொருளாதாரக் கட்டமைப்புக்களை அடையாளங்கண்டு தற்போது காணப்படுகின்ற இருதரப்பு வர்த்தகப் பெறுமதியான 550 மில்லியன் அமெரிக்க டொலர்களை, 1.5 பில்லியன் டொலர்கள் வரைக்கும் அதிகரிக்கின்ற நோக்குடன் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, பண்டங்கள், ஆற்றல்வளம் தொடர்பான ஒழுங்குகள், சேவைகள், முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்புக்கள், பொருளாதார பரிகாரங்கள், சுங்க நடவடிக்கை முறைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகன கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி  இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2018 ஜூலை மாதம் முதலாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இலங்கையிலும், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 2018 செப்ரெம்பர் மாதம் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலும் நடாத்தப்பட்டன. அதன் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்தப்பட்டது.

குறித்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் பற்றி நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: