சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு – நிதி சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம்!

Friday, December 1st, 2023

இறக்குமதிக்கட்டுப்பாடு அல்லது வரி செலுத்தாமை காரணமாக சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ள சட்டங்களை திருத்துவதற்கான நிதி சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதி சட்டம் மற்றும் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதி சட்டம் என்பவற்றை திருத்துவதற்காகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 2020 மே மாதம் 22 ஆம் திகதியிலான 2176/19 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது.

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் LCs திறப்பது தொடர்பில் ஏற்படும் சிக்கல்களை கருத்திற்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட 119 வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்வது தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சுக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் அதன்போது, 2353/16 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி பரிசீலிக்கப்பட்டு குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: