சுகாதார துறைக்கான உடனடி மறுசீரமைப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஜனாதிபதி ரணில் ஆலோசனை!

Friday, July 28th, 2023

நாட்டின் சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி மறுசீரமைப்புக்கள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், அது தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் கோரியுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023 மற்றும் 2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர், கடந்ததினம் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

சந்தைப் பெறுமதி மற்றும் செயற்திறனை அடிப்படையாக கொண்ட சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல், புத்திஜீவிகளின் வெளியேற்றத்தை மட்டுப்படுத்தல் மற்றும் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர். அத்துடன், அது தொடர்பிலான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டங்களின் ஊடாக புதிய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அந்தத் திட்டங்களை வகுக்கும் போது, ஸ்கெண்டினேவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றகரமான சுகாதார கட்டமைப்பு தொடர்பில் ஆராய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன, செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, உப தலைவர் வைத்தியர் எஸ்.மதிவானன் உள்ளிட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: