சி.சி.டி.வி. கெமராவில் எதுவும் பதிவாகவில்லை – இறுதிக்கட்டத்தை அடைந்தது இஷாலினியின் விசாரணை என பொலிசார் தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்கள் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இஷாலினி தொடர்பிலான விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக உயர் பொலிஸ் உத்தியோகத்தரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான அறிக்கை, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகளின் போது சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே

முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக  சி.சி.டி.வி. கமரா வில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாத்தின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சி.சி.டி.வி. கமராக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் டயகம சிறுமி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் காட்சிகள் மற்றும் தீ அணைக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் எதுவும் அந்த சி.சி.டி.வி. கமராவில் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயகம சிறுமி உடலில் தீ பற்றிக் கொண்டபோது சமையலறை அருகில் இருந்தவர்கள் அதனை அறிந்து  குறித்த தீயை அணைத்தார்கள் என்றும் அதன் பின்னர் ரிஷாத் வீட்டுக்கு முன்னால் இருந்த நீர் தடாகத்தில் குறித்த சிறுமி ஓடிச் சென்று குதித்து சிறிது நேரம் இருந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனை உறுதி செய்ய அந்த நீர் தடாகத்தின் அருகிலிருந்த சி.சி.டி.வி. கமரா செயலிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இடத்தில் பொருத்தப்பட்ட கமரா செயலிழந்துள்ளமை தொடர்பாக பொலிஸார் ரிஷாத் மனைவியிடம் கேட்டபோது, ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதால் புதிய கமரா பொருத்த முடியாமல் போனது என்றும் அவர் இல்லாததால், தொழில்நுட்ப வல்லுநர்கள் எவரையும் வெளியிலிருந்து வீட்டுக்குள் அழைத்து வரவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஷாத் வீட்டில் 16 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு 14 கமராக்கள் மட்டும் இயங்கியதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: