சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார மீட்சியை மையப்படுத்தி அமெரிக்காவினால் இலங்கைக்கு 40 மில்லியன் டொலர்கள் கடனுதவி!

Friday, September 17th, 2021

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கு அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இக்கடன் தொகையானது சர்வதேச முதலீடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக எஸ்.டீ.பி., டீ.எஃப்.சி.சி. மற்றும் என்.டீ.பி. ஆகிய வங்கிகளுக்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் வழங்கும் 265 மில்லியன் டொலர்கள் நிதியின் ஒரு பகுதியாகும் என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எஸ்.டி.பி. வங்கியானது இலங்கை முழுவதிலுமுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு 5 இலட்சம் ரூபாமுதல் ஒரு மில்லியன் ரூபா வரையான  ஆயிரத்து 400 இற்கும் அதிகமான கடன்களை வழங்க இந்த 40 மில்லியன் டொலர்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் டீ.எஃப்.சி.யின் மகளிர் முயற்சியின் ஒரு அங்கமாக அக்கடனில் ஆகக்குறைந்தது 40 சதவீதம் பெண்களுக்கு சொந்தமான அல்லது பெண்களை வலுவூட்டும் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வழங்குகின்ற வர்த்தகங்களுக்கு வழங்கப்படும். அவற்றுள் பல கடன்களை உலகலாவிய கொவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வர்த்தகங்களுக்கு உதவி செய்யும் என்றும் அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த கடன் தொகையை கையளிக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், இந்த நிதியானது இலங்கையிலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார மீட்சியை நோக்கிய அவர்களது பயணத்தில் உதவுவது மாத்திரமின்றி, அது இலங்கை பெண்கள், அவர்களது வர்த்தகங்கள் வளர்வதற்கும் உதவும்’ என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: