சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி – 40 பேரிடம் வாக்குமூலம் பெற்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக நேற்றைய தினம் மாலபே – பிட்டுகல பகுதியில் உள்ள ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரிடமே நேற்றையதினம் பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரையில் 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: