உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கை அகற்றப்பட்ட சிறுமியின் பெற்றோர் வலியுறுத்து!

Tuesday, September 5th, 2023

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவரின் கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவரது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு சிறுமியின் பெற்றோர் அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பின்றி விசாரணைகள் நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், கை அகற்றப்பட்டமைக்கான மருத்துவ ரீதியான காரணம் எழுத்துமூலம் அறிவிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டது.

மல்லாகம் – பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுமி ஒருவருக்கே இவ்வாறு இடது கையின் மணிக்கட்டுக்கு கீழுள்ள பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4 நாட்களாக குறித்த சிறுமிக்கு காய்ச்சல் நிலவியதை அடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற போதிலும் அவர் குணமடையாமையினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த சிறுமிக்கு, உடலுக்கு மருந்துகளை செலுத்தும் கெணுலா பொருத்தப்பட்டு அதனூடாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கெணுலா பொருத்தப்பட்ட கை செயலிழந்தமையை அடுத்து வைத்தியர்கள் அவரது இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதியை சத்திரசிகிச்சை மேற்கொண்டு துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறுமியின் கையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: