சிங்கள மாணவர்கள் வராது போனால் என்ன செய்யமுடியும்! – பொலிஸ்மா அதிபர்!

Wednesday, July 27th, 2016
யாழ். பல்கலை மோதல் சம்பவங்களை அடுத்து வெளியேறிய சிங்கள மாணவர்கள் தொடர்ந்தும் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்யமுடியாது என்று பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மோதலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. எனினும் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்கள் இதுவரை தமது வகுப்புகளுக்கு சமுகமளிக்கவில்லை. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்ய முடியாது. சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்று வட்டாரத்தில் சிவில் உடையில் ஏராளம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் சீருடையிலும் பொலிசார் கடமையில் உள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவுக்கும் பின்னர் சிங்கள மாணவர்கள் வருகை தராமல் இருப்பது அவர்களின் சுயதீர்மானமாகும். அதில் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒருசில ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று யாழ்.பல்கலைக்கழக சூழல் கொந்தளிப்பானதாக இல்லை. வழமை போன்று அமைதியாகவே காணப்படுகின்றது என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: