சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் உரிமை சிறுபான்மை மக்களுக்கும் இருக்கவேண்டும் – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல!
Tuesday, December 20th, 2016சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் உரிமை சிறுபான்மையினருக்கும் இருக்கவேண்டும் என்பதே ஐக்கியதேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைஅபிவிருத்தி திட்டத்தின் கீழ் பூஜாப்பிட்டிய அம்பத்தென்ன ஏசிஎஸ் ஹமீட் என்ற வீதியை காப்பெட் இட்டு சீர்செய்வதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தமது கட்சி கடும்போக்கான கட்சியல்ல என்று தெரிவித்த அமைச்சர் ஆட்சியில் இருக்கும்வரையில் சிறுபான்மையினருக்கு எந்தவித இடையூறும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
நாட்டின் முக்கிய இரண்டு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள அரசாங்கம் எந்தவகையிலும் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டில் பாரியளவில் முதலீடுகள் இடம்பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். இதன்பலனாக அம்பாந்தோட்டையிலிருந்து மொனாறாகலை வரையில் 500 கைத்தொழிலிற்சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
சீனா இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதிசெய்யும். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா குறைவான வரியை அறவிடுவது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கைக்கு பாரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
சீன அரசாங்கம் மேற்கொள்ளும் முதலீடுகள் மூலம் ஒருலட்சம் வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.இவ்வாறான வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயன்றபோதிலும் அரசாங்கம் எதிர்காலத்திட்டத்தில் தடைஏற்படுத்துவதற்கு இடமளிக்காது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
Related posts:
|
|