சாட்டி பிரதேசத்தின் குடிநீர் தொடர்பில் புதிய திட்டம் உருவாக்கப்படும் – வேலணை பிரதேசசபை தவிசாளர் கருணாகர குருமூர்த்தி!
Thursday, April 5th, 2018வேலணை பிரதேசத்துக்கு உட்பட்ட சாட்டி பகுதியிலிருந்து புங்குடுதீவு ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்காக வழமையாக நீர் பெறுகின்ற கிணற்றிலிருந்து தண்ணீர் பெறுவதற்கு குறித்த பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவரால் தடை விதித்தமையால் எழுந்த பிரச்சினை வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அவர்களின் தலையீட்டை அடுத்து தீர்வுகாணப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –
நேற்றையதினம் நடைபெற்ற குறித்த சம்பவத்தால் குடிநீருக்காக காத்திருந்த பல மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இதனால் இன்று மதியம் வரை குறித்த பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து தண்ணீர் விநியோகத்தில் ஈடுபடும் பவுசர் உரிமையாளர்கள் வேலணை பிரதேசசபை தலைவரிடம் முறையிட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நீர் விநியோகத்திலிருந்த தனிநபரது தலையீட்டை சுமூகமான முறையில் தீர்த்துவைத்து நீர் விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டுவந்திருந்தனர்.
இதன்பின் கருத்து தெரிவித்த வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான கருணாகரகுருமூர்த்தி நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கேற்றவகையில் செயற்றிட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் குறிப்பாக சாட்டிப் பிரதேசம் தீவகத்தின் பல பாகங்களுக்கு நீர் வழங்கும் மையமாக இருப்பதால் அப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும் உரிய திட்டம் ஒன்றை விரைவில் பிரதேசசபை மூலமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|