சவுதி அரேபிய கடற்பரப்பில் தாழ் அமுக்கம் – இலங்கையில் சூறாவளி எச்சரிக்கை!

Thursday, May 13th, 2021

சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் சில தினங்களில் இந்தத் தாக்கம் தீவிரம் பெற்று இலங்கையின் வடபகுதியைக் கடக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் நாளைமுதல் இந்தத் தாழமுக்கம் மேலும் தீவிரமடையலாம் என்றும் தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடமேல் திசை ஊடாக கடக்கும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் சில தினங்களில் காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வரையும் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையும் உள்ள கரையோரப் பிரதேசங்களில் கடல் சற்றுக் கொந்தளிப்பாக இருக்கும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே இந்த நாட்களில் குறிப்பிட்ட பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்தத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்சமயம் இந்தக் கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும்படியும் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: