சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, February 18th, 2021

சுற்றுலாதுறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால், சவால்களை வெற்றிகொண்டு இந்த தொழிற்துறையின் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போதுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் பொது மக்கள் பாதுகாப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளைத் தவிர சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

சுற்றுலாத் துறை அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இதன்போது கோவிட் தடுப்பூசி வழங்குவதில் ஹோட்டல் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் தொற்றுக்குள்ளாகாத போது, வசதிகளை வழங்குவோர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று முன்மொழியப்பட்டது.

நோய்த்தொற்றுக்குள்ளான சுற்றுலாப் பயணிகளை லங்கா ஹொஸ்பிடல் மற்றும் கொக்கலவில் இலங்கை இராணுவத்தினால் நடத்தப்படும் மருத்துவமனைக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் திட்டத்தின் படி சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் குறித்தும் சுற்றுலா முடிவில் அவர்களின் கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து நிவாரணங்களும் அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருப்பதால், முறையான திட்டமிடல் மூலம் எதிர்கால இலக்குகளை அடைய நடவடிக்கை எடுப்பதாக தொழில் முயற்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இதன்போது கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் உலக தரவரிசையில் எமது நாடு 10 வது இடத்தில் இருக்கின்ற சாதகமான நிலைமையை சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த சவாலான காலகட்டத்தில் சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களை கருத்திற் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தனியார் பேருந்து ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர...
மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்...
செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!