சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பை திருத்த முடிவு?
Saturday, October 29th, 2016சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வது குறித்து தேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்துகொள்வது தொடர்பில் ஆராயப்படுவததாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பு விவகாரத்தை கையாள்வது குறித்து ஆராய்ந்துவருகின்றன.
குறிப்பாக தேர்தல் முறை மாற்றம் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு முறைமையில் தீர்வு என்ற இரண்டு விடயங்களையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் அல்லது அந்த முறைமையை நீக்கவேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டியது கட்டாயமாகும்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும் செய்துகொள்ளக்கூடிய தேர்தல் முறை மாற்றம் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு முறைமையில் தீர்வு ஆகிய விடயங்களை அரசியலமைப்பு திருத்தமாக செய்து கொள்வது குறித்து அரசாங்கத் தரப்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|