சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியாகத்தர் புது ஐயங்குளத்தில் சடலமாக மீட்பு!

Friday, September 15th, 2023

கிளிநொச்சியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்று காணாமல்போன பொலிஸ் உத்தியாகத்தர் புதுஐயங்குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றையதினம் காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை துரத்திச் சென்ற மூன்று பொலிஸார்களில் இரண்டு பொலிஸார் மீண்டும் எட்டு முப்பது மணியளவில்  அவ்விடத்தில் ஒன்று கூடிய நிலையில் ஒரு பொலிஸ் அதிகாரி  காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்ப நாய் உதவியுடன் குளத்தின் கால்வாய் மற்றும் காடு போன்ற பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை வரை  தேடுதல் பணி முன்னெடுக்கபட்டும் காணாமல் போனவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இன்று 2ம் நாளாக தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து காணாமல்போன பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

இதேவேளை உயிரிழந்த உத்தியோகத்தரின் சடலத்தை  நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: