சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணை முன்னெடுப்பு!

Tuesday, September 13th, 2022

இலங்கையில் உண்டியல் மற்றும் ஹவாலா முறையின் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும் 33 பேரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஈட்டும் அந்நியச் செலாவணியை நாட்டிற்கு அனுப்புவதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து வெளிநாட்டுப் பணத்தைச் சேகரிக்கும் நடவடிக்கையில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கை ரூபாயே பணமாக அனுப்பி வைக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பெருந்தொகை பணத்தை டொலருக்கு பதிலாக ரூபாயாக பணியாளர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கும் பாரிய மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியின் ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நான்கு குழுக்கள் இந்த கும்பலை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: