சட்டமாகிறது சுகாதார ஒழுங்கு விதிகள்: மீறினால் 6 மாதம் வரை சிறை இரு தினங்களில் வர்த்தமானி வெளியிடப்படம் என்கிறார் சகாதார அமைச்சர்!

Sunday, October 11th, 2020

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டமூலத்தை தயார் செய்வதற்கான ஒழுங்கு விதிகள் சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியளவில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகாதிருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக காணப்படுகின்றது. எனினும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவரைபு திணைக்களத்திலிருந்து சட்டமூலம் கிடைத்தவுடன் இரு நாட்களுக்குள் அதனை வர்த்தமானியில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தள்ளார்.

அத்துடன்  குறித்த வர்த்தமானியில் வெளியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படுவோருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவரும் தொற்றுக்குள்ளானோருடன் பழகியவர்களில் 101 பேரும் அடங்குகின்றனர்.

அத்துடன் இதுவரை 50,726 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக COVID 19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

முப்படையினரால் பராமரிக்கப்படும் 92 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,224 பேர் தற்போது கண்காணிக்கப்படுகின்றனர் நேற்று 4,754 பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், இதுவரை நாட்டில் மூன்று இலட்சத்து 763 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளர்.

இதனிடையே கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நிலைமை தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் முகாமையாளர் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் ஆராயப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: