கோதுமை மா விலை அதிகரிக்காது: தட்டுப்பாடும் ஏற்படாது – வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Monday, September 5th, 2022
இலங்கையில் உள்ள இரண்டு பாரிய கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், ஒரு மாதத்திற்கு தேவையான கோதுமை மா உற்பத்திக்கு தேவையான கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தினருக்கு இடையில் இன்று (5) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துருக்கி மற்றும் டுபாயில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்குள் குறித்த கோதுமை மா நாட்டை வந்தடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது எனவும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் கூறுகிறார்.
கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை தற்போது விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது கருத்து தெரித்த அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன, சிறிய அளவிலான வெதுப்பக உற்பத்தியாளர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
மிக வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தமைக்கு என்.கே.ஜயவர்தன, அமைச்சருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்தார்.
000
Related posts:
|
|
|


