கொழும்பு இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, May 31st, 2023

ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கூட்டாகச் செயற்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலை தொடங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

சமீப காலங்களில், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவிகளை வழங்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது, எனினும், சில திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை நிறுத்தியதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது

தொடர்ந்து, இலங்கை-ஜப்பான் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த சரிவை சரி செய்யும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயம் அமைந்திருந்தது.

டோக்கியோவுக்குப் புறப்படுவதற்கு முன்னர், கொழும்பு கொழும்பு இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்” என அவர் தெரிவித்தார்.

மேலும், முதலீட்டுத் திட்டம் அல்லது வெளிநாட்டு உதவிக்காக இலங்கை வேறொரு நாட்டுடன் கைச்சாத்திடும் எந்தவொரு ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அத்தோடு அத்தகைய ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: