கொரோனாவை மக்கள் மறந்தவிட்டனர் – எச்சரிக்கை அவசியம் என்கிறார் இராணுவத் தளபதி!

Monday, September 28th, 2020

கொரோனா பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா பரவல் இருந்தமை தொடர்பில் மக்கள் இன்று மறந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி –

சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலை வெறுமனே 50 நாட்களுக்குள் தடுக்க முடிந்தது. அதேபோல் மக்களும் அதனை கட்டுப்படுத்த பெரும் தியாகங்களை செய்தனர். மக்களின் அர்ப்பணிப்பால் தான் இந்த நிலைமை 50 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடிந்தது.

எனினும் நாட்டில் கொவிட் 19 இல்லை என சொல்வது மிகவும் வருந்தக்க விடயம். தொடர்ந்தும் முககவசங்களை அணிவது மிக முக்கியம். அத்துடன் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். இவற்றை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 282,197 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அதேபோல், நேற்று 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னையில் இருந்து வந்த 8 பேரும், பங்களாதேஷில் இருந்து வந்த இருவரும், ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து வந்த ஒருவரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை 139 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினமும் முப்படையால் நிர்வகிக்கப்படும் மத்திய நிலையங்களில் இருந்து 606 பேர் குணமடைந்து வீடு திரும்பவுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை 45,636 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்துள்ளதுடன், இராணுவத்தால் பராமறிக்கப்படும் 77 மத்திய நிலையங்களில் இருந்து 7,484 பேர் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: