கொரோனாவால் இறப்பவர்களின் உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்படும் – சுகாதார அமைச்சு உறுதி!

Sunday, December 27th, 2020

கொரோனா மரணங்கள் தொடர்பாக போலியான செய்திகளை உருவாக்குவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் தொடர்பான இறுதி கிரியைகள் நடத்தும் விதம் குறித்து சில அரசியல்வாதிகள் மற்றும் இணையத்தளங்கள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

சுகாதார அமைச்சு கிடைத்துள்ள அனைத்து விசேட நிபுணர்களின் அறிக்கைகளுக்கு அமைய கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அனைத்து நபர்களின் உடல்களும் தகனம் மாத்திரமே செய்யப்படும் என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உலகில் பல நாடுகள் கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளன. இதனை சுட்டிக்காட்டியே இலங்கையில் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரப்பட்டு வருகிறது.

உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அடக்க செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய சமய வழிமுறையாகும். உலக சுகாதார அமைப்பும் கொரோனாவால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

எனினும் இலங்கையில் மாத்திரம் அதற்கு அனுமதி வழங்க மறுப்பதாக முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: