கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல் – கடத்தப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை எனவும் குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022

கோட்டா கோ ஹோம் போராட்டக்காரர்களில் முக்கிய ஒருவராக கருதப்படும் தானிஸ் அலிக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (26) விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தானிஸ் அலி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பொலிஸார் விடுத்த வேண்டுகோளை கவனத்தில் எடுத்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தானிஸ் அலி, நேற்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் செல்ல முற்பட்ட வேளையில் விமானமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டாகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்க புஷ்பிக கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த அவரை கோட்டை பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அவர் கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை என குற்றப்புலனாய்வுத்துறையின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் கோட்டை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: