குவைத்திலிருந்து பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!
Sunday, August 14th, 2016
ஒப்பந்த காலத்துக்கு மேல் சட்ட விரோதமான முறையில் பணிபுரிந்த 71 இலங்கை பணிப்பெண்களை குவைத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த பணியாளர்களின் விசா 5 ஆண்டுகள் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் அந்நாட்டில் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு சட்ட விரோதமாக பணியாற்றி வந்த 71 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில் 62 பெண்களும் 9 ஆண்களும் இருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்பபு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவில் அமைந்துள்ள ‘சஹன பியச’ நிலையத்தில் தகவல்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
குவைத்திலுள்ள தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலகத்தில் மேலும் 220 இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பபு பணியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் மாத்திரம் இவ்வாறு சட்டவிரோதமாக பணிபுரிந்த 1151 இலங்கையர் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் குவைத் நாடுகளில் ஒப்பந்தம் இன்றி தொழில் புரிகின்றனர். இவ்வாறு சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரிவது சட்டவிரோதமாகும்.
எனவே எதிர்காலத்தில் சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரிபவர்கள் தொடர்பில் கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த காலங்களில் குடும்ப வறுமை காரணமாக இலங்கையிலிருந்து அதிகளவானோர் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.அவர்களில் பலர் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு பணிப்புரிந்த நாடுகளில் பல சித்தரவதைகளுக்கு முகங்கொடுத்து மீண்டும் நாட்டிற்கு வருவதாகவும் அப்பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
Related posts:
|
|
|


